தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்டதை கண்டித்து சாலை மறியல்

பல்லடத்தை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேசபிரபு மர்ம கும்பலால் தாக்கப்பட்டதை கண்டித்து, திருவள்ளூர் பத்திரிகையாளர்கள் மறியல் செய்தனர்.

Update: 2024-01-26 15:50 GMT

 பல்லடத்தை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேசபிரபு மர்ம கும்பலால் தாக்கப்பட்டதை கண்டித்து, திருவள்ளூர் பத்திரிகையாளர்கள் மறியல் செய்தனர். 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதி  தனியார் தொலைக்காட்சி  செய்தியாளர் நேசபிரபு மர்ம கும்பலால் தாக்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவத்திற்கு திருவள்ளூர் மாவட்ட பத்திரிகையாளர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளனர். இதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து பத்திரிகையாளர்களும் ஒன்று சேர்ந்து சட்டையில்  கருப்பு பேட்ஜ் அணிந்தும் நடவடிக்கை எடு, நடவடிக்கை எடு, காவல்துறையினரே நடவடிக்கை எடு என வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியவாறு  கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதுபற்றிய தகவல் அறிந்ததும் நகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பத்திரிகையாளர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்  பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து பத்திரிகையாளர்களும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இச்சம்பகத்தால் அப்பகுதியில்   சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறுகையில் குற்றவாளிகளை தாமதம் இன்றி உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் இச்செயலில் ஈடுபட காரணமான உண்மை குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டறிந்து தயவு தாட்சண்யமின்றி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியாளர் நேசமணிக்கு உயர் சிகிச்சை அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்திரிகையாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும். பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News