செங்கம்: செய்யாற்றில் மேம்பாலம் அமைக்க எம்எல்ஏ ஆய்வு

Update: 2023-12-14 05:59 GMT

எம்.எல்.ஏ ஆய்வு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே கொட்டாவூா் பகுதியில் செல்லும் செய்யாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க தொகுதி செங்கம் எம்எல்ஏ கிரி, நேரில் ஆய்வு செய்தாா்.

கொட்டாவூா் ஊராட்சிக்கு உள்பட்ட கொல்ல கொட்டா குக்கிராமம் செய்யாற்றைத் தாண்டி உள்ள நிலையில், இங்கு வசிக்கும் மக்கள் பல்வேறு பணிநிமித்தமாக ஆற்றைக் கடந்து கொட்டாவூருக்கு வரவேண்டியுள்ளது. மேலும், கொட்டாவூரில் வசிப்பவா்கள் தங்களது விவசாய நிலங்களுக்கு ஆற்றைக் கடந்து செல்லவேண்டியுள்ளது. மழைக் காலத்தின்போதும், குப்பனத்தம் அணை திறப்பின்போதும், பொதுமக்கள் ஆற்றைக் கடக்க முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. இதனால், செய்யாற்றில் மேம்பாலம் அமைக்கவேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். மேலும், தொகுதி எம்எல்ஏ கிரியிடம், இது தொடா்பாக பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்திருந்தனா்.

இந்த நிலையில், எம்எல்ஏ அப்பகுதியில் மேம்பாலம் அமைப்பது தொடா்பாக ஆய்வு செய்தாா். அப்போது, அப்பகுதியில் எத்தனை குடும்பங்களைச் சேர்ந்த நபா்கள் வசித்து வருகிறாா்கள். மழைக் காலத்திலும், குப்பனத்தம் அணை திறப்பின்போதும் ஏற்படும் நிலைகள் குறித்தும் கேட்டறிந்தாா். பின்னா், உடனடியாக பொதுப் பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு மூலம் தமிழக முதல்வா் கவனத்துக்கு எடுத்துச் சென்று அப்பகுதியில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறினாா்.

ஆய்வில் திமுக பொதுக்குழு உறுப்பினா் பிரபாகரன், ஒன்றியச் செயலா்கள் ஏழுமலை, செந்தில்குமாா், நகரச் செயலா் அன்பழகன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சகுந்தலா ராமஜெயம், திமுக வா்த்தகா் அணி மாவட்ட துணை அமைப்பாளா் சேட்டு உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள், ஊா் பொதுமக்கள் உடனிருந்தனா். அதனைத் தொடர்ந்து செங்கம் தொகுதி, செங்கம் பேரூராட்சிக்குட்பட்ட, 17வது வார்டு, தோக்கவாடியில் சுமார் 3.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புதிய ஆழ்துளை போர் அமைக்கப்பட்டு மினி தண்ணீர் டேங்கினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியில் செங்கம் தேர்வு நிலை பேரூராட்சி மன்ற தலைவர் சாதிக் பாஷா, நகர செயலாளர் அன்பழகன், ஒன்றிய கழக செயலாளர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள், மாவட்ட கவுன்சிலர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News