நள்ளிரவில் அரசு பேருந்து மீது கல்வீச்சு - போதை ஆசாமி அட்டூழியம்

இரணியல் அருகே அரசு பேருந்து மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த போதை ஆசாமி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2024-06-05 04:15 GMT

கல்வீச்சில் உடைந்த பேருந்து கண்ணாடி 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இருந்து நேற்று நள்ளிரவில் குளச்சலுக்கு மகளிர் இலவச அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்ஸை குளச்சலை சேர்ந்த விஜயகுமார் (45) என்பவர் ஓட்டி சென்றார். காட்டாத்துறையை சேர்ந்த ஜெகன் (48) என்பவர் நடத்துனராக இருந்தார்.       பஸ் இரணியல் ஜங்ஷன்- ல் நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டது. அப்போது சுஜித் என்பவர் தள்ளாடியபடி பஸ்ஸுக்குள் ஏறினார். அவரிடம் கண்டக்டர் டிக்கெட் எடுக்க கூறிய போது தகராறு செய்து, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பஸ் சென்று கொண்டிருந்த போது கண்டக்டர் இடம் தொடர்ந்து  தகராறு செய்து கொண்டே இருந்துள்ளார்.      இதனிடையே பஸ் இரணியல்  பகுதி ஆமத்தன்பொத்தை  என்ற  இடத்தில் வளைவான பகுதியில் மெதுவாக  சென்று கொண்டிருந்த போது, சுஜித் திடீரென பஸ்ஸில் இருந்து கீழே குதித்ததாக கூறப்படுகிறது. பின்னர் சாலையில் கிடந்த ஒரு கல்லை எடுத்து பஸ்சின் பின்பக்கத்தில் எரிந்து கண்ணாடியை உடைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.      

இதில் கண்ணாடி முழுவதும் உடைந்து ரோட்டில் சிதறியது. உடனடியாக பஸ்சை நிறுத்திய டிரைவர் இரணியல் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடம் வந்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நள்ளிரவு  என்பதால் பஸ்ஸில் அதிக அளவு பயணிகள் இல்லை. இதனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கு இந்த பாதிப்பும் ஏற்படவில்லை.போதை ஆசாமி சுஜித் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News