மாணவிகள் கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவிகள் கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்

Update: 2024-01-04 15:06 GMT

மாணவிகள் கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம் 

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் பிசி, எம்பிசி, மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த பெண் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் மட்டும் 9 மற்றும் 10ஆம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிட தமிழ்நாடு அரசு உத்தேசித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பெற்றோரின் உச்சகட்ட ஆண்டு வருமானம்  ரூ.2.5 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். தகுதியுள்ள மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.4,000- கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும். இத்திட்டத்தின்கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் 9 மற்றும் 10ஆம் வகுப்பில் பயிலும் மாணவிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அல்லது அஞ்சல் வங்கிகளில் தமது பெயரில் வங்கிக்கணக்கு துவங்கி அதனை தமது ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும்.  மேற்படி ஆதார் எண் மற்றும் வங்கி விபரங்களை தமது வருமானச் சான்று மற்றும் சாதிச்சான்று நகல்களுடன் சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.  அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மாணவியர்களது விபரங்களை EMIS (Educational Management Information System) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறும் மாவட்ட ஆட்சியர்கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News