பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் மாணவர்கள், பணிபுரிவோர் அவதி
31ஜி வழித்தட பேருந்து மேடவாக்கம் வரை நீட்டிக்கப்படாததால் மாணவர்கள், பணிபுரிவோர் அவதியடைந்து வருகின்றனர்.
கிழக்கு தாம்பரத்தில் இருந்து, வேளச்சேரி சாலை ராஜகீழ்ப்பாக்கம் சிக்னலில் திரும்பி, மாடம்பாக்கம், வேங்கைவாசல், சந்தோஷபுரம் வழியாக சென்று, மீண்டும் வேளச்சேரி சாலையை அடைந்து, மேடவாக்கம் கூட்டுசாலை வரை, தடம் எண்: 31ஜி என்ற பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில், சந்தோஷபுரத்தில் மூடுகால்வாய் கட்டுமான பணி காரணமாக, கிழக்கு தாம்பரம் முதல் வேங்கைவாசல் சமுதாய நலக்கூடம் வரை மட்டுமே, இப்பேருந்து இயக்கப்பட்டு வந்தது.
மூடு கால்வாய் பணி முடிந்து, இரண்டு மாதங்கள் ஆகியும், வேங்கைவாசல் சமுதாய நலக்கூடம் வரை இயக்கப்படும் பேருந்து, மேடவாக்கம் வரை நீட்டிக்கப்படவில்லை. இதனால், மாணவர்கள், வேலைக்கு செல்வோர் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேடவாக்கத்திற்கு நீண்ட துாரம் நடந்து சென்று, பேருந்து ஏற வேண்டிய சூழல் நிலவுகிறது. இது தொடர்பாக, மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் பயனில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பிரச்னையில் தலையிட்டு, கிழக்கு தாம்பரத்தில் இருந்து சந்தோஷபுரம் வழியாக மேடவாக்கத்திற்கு வழக்கம்போல் அப்பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.