பணி முடிந்தும் திறக்கப்படாத கழிப்பறையால் மாணவியர் அவதி

சின்ன காஞ்சிபுரம் அரசு பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட அதிநவீன கழிப்பறையை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-06-14 09:46 GMT

சின்ன காஞ்சிபுரம் அரசு பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட அதிநவீன கழிப்பறையை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சின்ன காஞ்சிபுரம் பி.எம்.எஸ்., அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 1,500க்கும் மேற்பட்ட மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் உள்ள மாணவியரின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும் என, பள்ளி மேலாண்மை குழுவினர் கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து காஞ்சிபுரம் தி.மு.க.,   எம்.எல்.ஏ., எழிலரசன், சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்த 40 லட்சம் ரூபாய் செலவில், அதிநவீன கழிப்பறை கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை பள்ளி வளாகத்தில் கடந்த ஆண்டு மே 8ல் நடந்தது.

அதிநவீன கழிப்பறை கட்டுமானப் பணி நிறைவடைந்து ஐந்து மாதங்களுக்கு மேலாகியும் கழிப்பறை திறக்கப்பட்டு, மாணவியரின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. கோடை விடுமுறைக்குப்பின் பள்ளி நேற்று திறக்கப்பட்டது. மாணவியரின் எண்ணிக்கை ஏற்ப பள்ளியில் கழிப்பறை இல்லாததால், மாணவியர் இயற்கை உபாதை கழிக்க அவதிக்குள்ளாகினர். எனவே, புதிதாக கட்டப்பட்ட அதிநவீன கழிப்பறையை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News