உவர்நீரில் கொடுவா மீன் வளர்ப்பிற்கு மானியம் - மாவட்ட ஆட்சியர் தகவல்

Update: 2023-11-26 00:55 GMT
கொடுவா மீன்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் கொடுவா மீன் உற்பத்தியினை அதிகரிக்கவும், புதியதாக கொடுவா மீன்குளங்கள் அமைத்திட விரும்புவோர்கள் பயன்பெறும் வகையில், புதிய மீன்குளங்கள் அமைக்கவும், அதற்கான உள்ளீட்டு செலவீனங்களுக்கு மானியம் வழங்கிடும் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் புதிய மீன்குளம் ஒரு ஹெக்டேர் அளவில் அமைத்திட செலவினம் ரூ.8 லட்சம் எனவும், உள்ளீட்டு செலவீனம் ரூ.6 லட்சம் எனவும் நிர்ணயித்து, அதனில் பொதுப் பிரிவினருக்கு 40 விழுக்காடு மானியமாக ரூ.5.60 லட்சம் வழங்கப்பட உள்ளது.

மேலும், இதேபோன்று உயிர் கூழ்மதிரள் (பயோ பிளாக்) குளங்களில் இறால் வளர்த்தல் மற்றும் உள்ளீட்டு செலவினங்களுக்கான மானியம் வழங்கும் திட்டத்திற்கு மகளிர் பிரிவின் கீழ் 60 விழுக்காடு மானியம் 3 எண்ணம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  இதன்படி 1 அலகிற்கு ஆகும் மொத்த செலவினம் ரூ.18 லட்சத்தில் பெண்களுக்கு 60 விழுக்காடு மானியமாக ரூ.10.80 லட்சம் வழங்கப்படும். மேலும், பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் 2021-22-ன் கீழ் உவர்நீர் இறால் வளர்ப்பிற்காக புதிய குளங்கள் கட்டுதல் மற்றும் உள்ளீட்டு செலவீனங்களுக்கான மானியம் பொதுப்பிரிவிற்கு 6 ஹெக்டேர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. 

இத்திட்டத்தின்கீழ் புதிய இறால் வளர்ப்பு குளம் அமைப்பதற்கும் மற்றும் உள்ளீட்டு செலவீனத்திற்கான மொத்த செலவினம் ரூ.14 லட்சத்தில் 40 விழுக்காடு மானியமாக ரூ.5.60 லட்சம் மானியமாக வழங்கப்படும். மேற்படி திட்டங்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் தகுதி மற்றும் மூப்பு நிலையின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து தேர்வு செய்யப்படும்.  எனவே, விண்ணப்பிக்க விரும்பும் இறால் வளர்ப்பு விவசாயிகள், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், எண்.873/4, அறிஞர் அண்ணாசாலை, கீழவாசல், தஞ்சாவூர் என்ற அலுவலக முகவரியில் நேரிலோ, அல்லது 04362-235389 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு 20.12.2023 க்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News