கோடை விடுமுறை : ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கோடை விடுமுறையையொட்டி நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்தனர். இதனால் கடைகளில் விற்பனை அதிகரித்தது.;

Update: 2024-04-21 08:40 GMT

சுற்றுலா பயணிகள் 

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்கள் அங்குள்ள பக்கோடா பாயிண்ட், லேடிஸ் சீட், ஜென்ஸ் சீட், அண்ணா பூங்கா, சேர்வராயன் மலைக்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிபார்ப்பர். மேலும் சுற்றுலா பயணிகள் படகில் உற்சாகமாக சவாரி செய்து மகிழ்வர். கோடை விடுமுறையையொட்டி ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க தொடங்கியது.

Advertisement

இதனிடையே கோடை விடுமுறையையொட்டி நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்தனர். அவர்கள் தங்களது குடும்பத்தினர், நண்பர்களுடன் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிபார்த்தனர். சிறுவர், சிறுமிகள் அண்ணா பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்களில் விளையாடி மகிழ்ந்தனர். படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து படகில் உற்சாகமாக சவாரி செய்தனர்.

இளைஞர்கள், இளம்பெண்கள் இயற்கை காட்சிகளுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் அங்குள்ள கடைகளில் விற்பனை படுஜோராக நடந்தது. ஓட்டல், சாலையோர கடைகளில் பொதுமக்கள் கூட்டம் இருந்ததை காணமுடிந்தது. இதற்கிடையே அசம்பாவிதங்களை தவிர்க்க ஏற்காடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சரி செய்தனர்.

Tags:    

Similar News