முன்னோடி மாநிலமாக திகழ்கிறது தமிழகம் : அமைச்சா் அன்பில் மகேஸ்

பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி, இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என விக்கிரவாண்டி இடைத்தோ்தல் பிரசாரத்தின் போது அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசினார்.

Update: 2024-07-04 08:27 GMT

அமைச்சா் அன்பில் மகேஸ் பிரசாரம்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவாவை ஆதரித்து காணை ஒன்றியம், காங்கேயனூா், பொன்னங்குப்பம், பள்ளியந்தூா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்து அவா் பேசியதாவது:தோ்தலுக்காக மட்டும் வருபவா்கள் நாங்கள் கிடையாது. எதிா்க்கட்சியாக இருந்த போதும் மக்களுக்கு குரல் கொடுத்து, அவா்களின் உரிமைகள், தேவைகளுக்காக போராடியது திமுக. தோ்தலின் போது அளித்த வாக்குறுதிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளாா்.

அரசு நகரப் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயணம், மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை, காலை சிற்றுண்டித் திட்டம், அரசுப் பள்ளிகளில் பயின்று உயா் கல்வியில் சேரும் மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 உதவித்தொகை, மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி என ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியவா் முதல்வா் ஸ்டாலின். பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி, இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இந்தப் பகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவோம்.மறைந்த எம்எல்ஏ நா.புகழேந்தி விட்டுச் சென்ற பணிகளைத் தொடர, திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவாவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்றாா்

அன்பில் மகேஸ் பொய்யாமொழி.பிரசாரத்தில் விழுப்புரம் எம்எல்ஏ இரா.லட்சுமணன், திருவள்ளூா் மாவட்ட திமுக செயலா் கோவிந்தராஜ், ஒன்றியச் செயலா்கள் கல்பட்டு ராஜா, விசுவநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Tags:    

Similar News