திருட்டு வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டு சிறை

சேலம் அருகே வீட்டில் திருடிய வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Update: 2024-05-10 07:09 GMT

நீதிமன்றம் 

சேலம் அருகே உள்ள மல்லூர் பகுதியை சேர்ந்தவர் செழியன். இவர் டாஸ்மாக் குடோனில் போக்குவரத்து பிரிவில் மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி அவரது வீட்டுக்கு குறி சொல்வதாக கூறி வாலிபர் ஒருவர் வந்தார். பின்னர் அவர் வீட்டில் இருந்த 8 கிராம் வெள்ளி சங்கிலியை திருடி சென்று விட்டார். இதுகுறித்து மல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் செழியன் வீட்டில் திருடியதாக கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள வேலம்பட்டி பகுதியை சேர்ந்த பொன்னுவேல் (வயது 24) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு 6-வது கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. நகை திருடிய குற்றத்திற்காக பொன்னுவேலுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட்டு கமலக்கண்ணன் தீர்ப்பளித்தார்.

Tags:    

Similar News