மணல் திருடிய 4 பேர் மீது வழக்கு பதிவு - வாகனங்கள் பறிமுதல்

மானாமதுரையில் மணல் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

Update: 2024-03-21 05:48 GMT

 மணல் திருட்டு 

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள சிஎஸ்சி பள்ளி மைதான பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் மணல் திருட்டு நடைபெறுவதாக மாங்குளம் குரூப் கிராம நிர்வாக அலுவலர் சீதாலட்சுமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சீதாலட்சுமி மானாமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் மானாமதுரை காவல் ஆய்வாளர் தெய்வீக பாண்டியன் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டார். அந்த சோதனையில் கே.ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் ஜெயபாண்டி மானாமதுரை வேளார் தெருவை சேர்ந்த முருகேசன் மகன் சக்தி குமார், மானாமதுரை மூங்கில் ஊரணி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சிங்காரவேலன் மற்றும் மானாமதுரை பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் சூர்யா ஆகிய நான்கு பேரும் மணல் திருட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் காவல் ஆய்வாளர் அவர்களிடமிருந்து சவுடுமணல் 5 யூனிட், மணல் அள்ள பயன்படுத்திய ஹிட்டாச்சி மற்றும் ஒரு டாரஸ் லாரி ஆகியவை பறிமுதல் செய்து அவர்கள் நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து ஜெயபாண்டி சக்திகுமார் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சிங்காரவேலன் சூர்யா ஆகிய இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News