இளம்பெண்ணை ஓட ஓட விரட்டி கத்தியால் குத்திய வாலிபர் 

நாகர்கோவிலில் காதல் பிரச்சினையில் இளம்பெண்ணை ஓட ஓட விரட்டி கத்தியால் குத்திய வாலிபர் தன் கழுத்தையும் அறுத்து கொண்டார். காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2024-05-15 05:29 GMT
பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பீச் ரோடு பகுதியை சேர்ந்தவர் சிவரஞ்சனி (27). திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். சிவரஞ்சனி ஒரு கொசுவலை விற்பனை செய்யும் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் மருங்கூர் பகுதி சேர்ந்த கட்டிட தொழிலாளியான, திருமணமாகாத, ஆண்டனி வினோ (33) என்பவருக்கும் சமூக வலை தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மறியுள்ளது.  இந்த நிலையில் ஆண்டனி வினோவுக்கு பெற்றோர் பெண் பார்த்து உள்ளனர். 

இந்த விவகாரம் சிவரஞ்சனிக்கு தெரிய வந்ததும்   இருவரும்  எடுத்த போட்டோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் என கூறி ஆன்டனியை மிரட்டியதாக தெரிகிறது.       இதனால் ஆண்டனி வினோ நேராக பேசலாம் என கூறி அவரை அழைத்துள்ளார். அதன் அடிப்படையில் நேற்று மாலை சிவரஞ்சனி வேலை செய்யும் கொசுவலை கம்பெனிக்கு ஆண்டனி சென்றார். அங்கு பேசிக் கொண்டிருக்கும் போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு ஆத்திரமடைந்த ஆண்டனி வினோ தான் மறைத்து திறந்த கத்தியை  எடுத்து சிவரஞ்சனியை ஓட ஓட துரத்தி  குத்திவிட்டு, அவர் அங்கிருந்து தப்பி ஓடினார்.   இதில் சிவரஞ்சனிக்கு தலை மற்றும் கழுத்துப் பகுதியில் குத்து விழுந்தது. படுகாயம் அடைந்த சிவரஞ்சனி சாலையில் விழுந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார்  ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.   

இதற்கிடையில் போலீஸ் தன்னை பிடித்து விடும் என்ற பயத்தில் தனக்கு தானே ஆண்டனி கழுத்தை அறுத்துக் கொண்டார். இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News