பேரணியாக வந்த நாம் தமிழர் கட்சியினர் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு!

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மற்றும் உடன் வந்தவர்கள் வாகனங்களை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்

Update: 2024-03-25 10:32 GMT

 நாம் தமிழர் கட்சி

கோவை:நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு கடந்த வாரம் தொடங்கிய நிலையில் அரசியல் கட்சியினர்,சுயேட்சைகள் என தொடர்ச்சியாக வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். இன்று அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர். அதிமுக சார்பில் போட்டியிடும் சிங்கை.ராமசந்திரன் அண்ணா சிலை அருகே உள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் இருந்து வந்து வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலாமணி காளப்பட்டியில் இருந்து வாகன பேரணியாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய இருந்தார்.இதற்காக நாம் தமிழர் கட்சியினர் சுமார் 50க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக வந்தனர். அவர்கள் அனைவரும் காளப்பட்டி நால் ரோட்டில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு அனுமதியின்றி வாகன பேரணியாக செல்லக்கூடாது என தேர்தல் அலுவலர்கள் கூறியதால் வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்தியதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.இதனிடையே வாகன பேரணிக்கு அனுமதி மறுத்ததால் நாம் தமிழர் கட்சியினர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதன் பின்னர் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டது நிலையில் மீண்டும் நேரு நகர் பகுதியில் போலீசாரால் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணி வாகனம் மற்றும் உடன் வந்தவர்களின் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது.இதனால் மீண்டும் போலீசாருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் ஒவ்வொரு வாகனங்களாக அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News