மானாமதுரை ஆனந்தவள்ளி சோமநாதர் கோயிலில் திருக்கல்யாணம்

மானாமதுரை ஆனந்தவள்ளி சோமநாதர் கோயிலில் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நடைபெற்றது

Update: 2024-04-22 05:08 GMT

ஆனந்தவள்ளி, சோமநாதர்  திருக்கல்யாணம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண உற்சவம் இன்று நடைபெற்றது. கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் பத்து நாட்கள் திருவிழா தொடங்கியது. விழா நாட்களின் போது அம்மனும், சுவாமியும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா சென்று வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணத்திற்காக ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி பிரியாவிடையுடன் சர்வ அலங்காரங்களுடன் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பொன்னம்பலம் பிள்ளை மண்டகப்படிக்கு எழுந்தருளினர்.

அங்கு சிவாச்சாரியார்கள் யாகம் வளர்த்து திருக்கல்யாணத்திற்கான பூஜைகளை செய்த பின்னர் குமார் பட்டர், பரத்வாஜ் பட்டர் ஆகியோர் மாலைகளை மாற்றிக் கொண்ட பின்னர் காலை 9.50 மணிக்கு சோமநாதர் சுவாமியிடம் இருந்து பெற்ற திருமாங்கல்யத்தை ஆனந்தவல்லி அம்மனுக்கு அணிவித்தனர். அதே நேரத்தில் கோயிலில் திரண்டிருந்த ஏராளமான பெண்கள் தங்களது திருமாங்கல்யத்தையும் மாற்றிக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அம்மனுக்கும், சுவாமிக்கும் சிறப்பு பூஜைகளும் தீபாராதனைகளும் நடைபெற்றன.

கோயில் வளாகத்திற்குள் நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்ச்சியை பக்தர்கள் காண்பதற்கு வசதியாக கோயிலின் வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த அகன்ற திரையில் நேரடி காட்சிகளாக ஒளிபரப்பினர். திருக்கல்யாணத்திற்கான ஏற்பாடுகளை பொன்னம்பலம் பிள்ளை மண்டகப்படிதார்கள், சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்தினர் உள்பட பலர் செய்திருந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களிடமிருந்து திருக்கல்யாண மொய் வசூல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News