அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவரப்பட்ட திருநீலகண்டேஸ்வரர் கோவில்

பல்வேறு முறைகேடு புகார்களின் எதிரொலியாக ஜமீன் பல்லாவரம் திருநீலகண்டேஸ்வரர் கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.

Update: 2024-04-10 08:02 GMT

திருநீலகண்டேஸ்வரர் கோவில்

செங்கல்பட்டு மாவட்டம், ஜமீன் பல்லாவரத்தில், திருநீலகண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின் பரம்பரை அறங்காவலராக இருந்த துரைசாமி என்பவர் இறந்த பின், பல்வேறு தனி நபர்கள் நிர்வகித்து வந்தனர். இந்த காலக் கட்டத்தில், கோவிலுக்கு சொந்தமான நகரில் மையப் பகுதியில் இருந்த பல ஏக்கர் நிலம், சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டன. இந்த நிலத்தை மீட்க, கோவிலை நிர்வகித்து வந்தவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மற்றொரு புறம், நிர்வாகத்தில் நடந்து வரும் முறைகேடுகள் தொடர்பாக, இந்து அறநிலையத் துறைக்கு பல்வேறு புகார் மனுக்கள் வந்தன.

இது தொடர்பாக, அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, கோவில் நிர்வாக நலன் கருதியும், சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்ட கோவில் நிலத்தை மீட்கவும், ஹிந்து அறநிலையத் துறை சட்டப் பிரிவு, 49(1)கீழ், திருநீலகண்டேஸ்வரர் கோவிலை, செங்கல்பட்டு இந்து அறநிலையத் துறை உதவி கமிஷனர் லட்சுமிகாந்த பாரதிதாசன் தலைமையில், வருவாய், காவல் துறை அதிகாரிகள் இணைந்து, நேற்று, தங்கள் வசம் கொண்டு வந்தனர். தொடர்ந்து, அக்கோவில் தக்காராக, தாம்பரம்செல்வ விநாயகர் மற்றும்கோதண்டராமர் கோவில் செயல் அலுவலராக உள்ள, தீபா பொறுப் பேற்றுக் கொண்டார்.

Tags:    

Similar News