விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: இபிஎஸ் பகிரங்க பேட்டி

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சுதந்திரமாக நடைபெறாது அதனால் அதிமுக அங்கு போட்டியிடவில்லை இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-16 11:17 GMT

செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி 

மதுரையில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலத் தலைவர் கதிரவன் இல்ல திருமண விழாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி நடத்தி வைத்தார்,

நிகழ்வில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், தளவாய் சுந்தரம், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்,.

பின்னர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் "அதிமுக எழுச்சியோடு வலிமையோடு உள்ளதை இந்நேரத்தில் சூட்டி காட்டுகிறேன், அதிமுகவுக்கும் பா.சிதம்பரத்திற்கும் என்ன சம்பந்தம், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாதது அதிமுகவில் எடுத்திருக்கக் கூடிய முடிவு.

அவருடைய கட்சியில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் நடந்தவை உங்களுக்கு தெரியும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் ஜனநாயக படுகொலை நடைபெற்றது,

வாக்காளர்களை ஆடு, மாடுகளை போல் அடைத்து வைத்து திமுக கொடுமைப்படுத்தியது, ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம், காவல்துறை, அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் மாநில அரசுக்கு துணை போனது, இடைத்தேர்தலில் அமைச்சர்கள் முகாமிட்டு ஆட்சி அதிகாரம் பண பலத்தை பயன்படுத்தி அதிகமான பரிசு பொருள் கொடுத்து தேர்தலில் தில்லுமுல்லு செய்தனர்.

ஈரோடு கிழக்கு போலவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் நடைபெறும் என்பதால் அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை, விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட விக்கிரவாண்டியில் அதிமுகவுக்கு 6000 வாக்குகள் குறைவாகத்தான் கிடைத்தது, விக்கிரவாண்டி எடுக்குறதுக்கு திமுக ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி பணத்தை வாரி இரைப்பார்கள்,

பூத் வாரியாக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு பணத்தை கொடுப்பார்கள், விக்கிரவாண்டியின் ஜனநாயக படுகொலை நடைபெறும், சுதந்திரமாக மக்கள் வாக்களிக்க முடியாது, ஆகவேதான் விக்கிரவாண்டி தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்புக்கு வேறு எந்த காரணமும் இல்லை,

ஈரோடு கிழக்கில் வாக்காளர்கள் அடைத்து வைக்கப்பட்டது ஒரு சில தொலைக்காட்சிகள் மட்டுமே ஒளிபரப்பு செய்யப்பட்டது, ஊடகங்கள் நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும், ஈரோடு கிழக்கில் கூட்டணி கட்சிக்காக 36 அமைச்சர்கள் வாக்காளர்களை பட்டியில் அடைத்து வைத்தது போல வாக்காளர்களை அடைத்து வைத்திருந்தனர்.

வாக்காளர்களை விடுவிக்கவில்லை என்றால் நானே நேரில் வருவேன் என்ன சொன்ன பிறகு வாக்காளர்களை ஊர் ஊராக அழைத்துச் சென்றனர், 2019 நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 38 இடங்களை பிடித்தது, 2021 இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக 200 இடங்களை பிடிக்கும் எனக் கூறினார், ஆனால் அந்த தேர்தலில் அதிமுக 75 இடங்களை பிடித்தது, ஆகவே சட்டமன்றத் தேர்தல் வேறு நாடாளுமன்ற தேர்தல் வேறு,

மக்கள் தேர்தல்களை பிரித்து பார்த்து தான் வாக்களிக்கிறார்கள், 2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றாலும் நிலக்கோட்டையில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது, தமிழ்நாட்டு மக்களைப் பொறுத்த அளவுக்கு மத்தியில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் மாநிலத்தில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என பிரித்துப் பார்த்து சிந்தித்துப் பார்த்து தான் வாக்களிக்கிறார்கள்.

2014 இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக மிகக் குறைவான இடங்களில் வெற்றி பெற்றது, ஆனால் அடுத்தடுத்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரவில்லை, அதுபோலத்தான் மாறி மாறி வெற்றி தோல்விகள் கிடைக்கும், அரசியல் கட்சிகளை பொறுத்த அளவுக்கு எல்லா தேர்தலிலும் வெற்றி பெற்றதாக சரித்திரக் கிடையாது, வெற்றி, தோல்வி என்பது மாறி மாறி தான் வரும், 2026 ல் அதிமுக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்" என கூறினார்

Tags:    

Similar News