ஆழ் கடலில் மாயமான மகனை மீட்டுத் தர கலெக்டர் ஆபீசில் பெண் மனு
நாகர்கோவிலில் ஆழ் கடலில் மாயமான மகனை மீட்டுத் தர கலெக்டர் அலுவலகத்தில் தாயார் கோரிக்கை மனு.
Update: 2024-02-12 11:20 GMT
குமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர் முகாம் இன்று நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பலரும் மனு கொடுக்க வந்திருந்தனர். இதில் குளச்சலை சேர்ந்த ஹயர் நிஷா (53) என்பவர் முகாமில் கலெக்டரிடம் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- நான் குளச்சல் காமராஜர் சாலை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். எனது மூத்த மகன் முகைதீன் யாசர் அலி (32)கடந்த மாதம் 4-ம் தேதி கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் மீன்பிடிப் படகில் சமையல் வேலைக்கு சென்றார். 9ஆம் தேதி ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது முகைதீன் யாசர் அலி மாயமாகிவிட்டதாக கொச்சி மீன் பிடி துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தற்போது ஒரு மாதம் தாண்டியும் எனது மகன் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே மகனை உடனடியாக கண்டுபிடித்து தர வேண்டும் என மனு அளித்தார்.