பெரும் சோகம்! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3குழந்தைகள் குளத்தில் மூழ்கி பலி

உறவினர்களுடன் குளத்தில் குளிக்க சென்ற 3 குழந்தைகள் குளத்து நீரில் மூழ்கி பலியானதால் அதிர்ச்சி.

Update: 2024-03-09 14:59 GMT

தூத்துக்குடி அருகே உள்ள பேரூரணி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி மீனா. இவர்களுக்கு 13 வயதில் ஏழாம் வகுப்பு படிக்கும் சந்தியா மற்றும் 10 வயதில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் கிருஷ்ணவேணி என்ற இரு பெண் குழந்தைகளும், 7 வயதில் இரண்டாம் வகுப்பு படிக்கும் இசக்கி ராஜா என்ற ஆண் குழந்தையும் இருந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று பிற்பகல் மூன்று குழந்தைகளும் தங்கள் உறவினர்களுடன் பேரூரனியில் அமைந்துள்ள ஒரு குளத்தில் குளிப்பதற்காக சென்று உள்ளனர். அதில் குளத்தில் ஆழமான பகுதிக்கு சென்ற மூன்று குழந்தைகளும் நீரில் மூழ்கி மூச்சு திணறி இறந்துள்ளனர்.

மூன்று குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.‌ ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தட்டப்பாறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News