வனவிலங்கு வேட்டை - கோடநாடு வழக்கில் சம்பந்தப்பட்ட அ‌திமுக நிர்வாகி தலைமறைவு

அ.தி.மு.க., பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரும், கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இரு சகோதரர்களின் ஒருவரான அ.தி.மு.க., வர்த்தக அணி மாநிலச் செயலாளர் சஜீவன் உட்பட 5 பேர் வனவிலங்குகளை வேட்டையாடியதாக வனத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2024-04-23 07:49 GMT

மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகமான புலிகள், யானைகள், காட்டுமாடுகள், சிறுத்தை புலி, கரடி, சிங்கவால் குரங்கு, நட்சத்திர ஆமைகள், மான் இனங்கள் உட்பட பல்வேறு உயிரினங்களின் வாழ்விடமாக இந்த வனப்பகுதி திகழ்கிறது. இந்நிலையில் நேற்று நீலகிரி வனக்கோட்டத்திற்குட்பட்ட சில்வர் கிளவுட் எஸ்டேட் பகுதியில் வனவிலங்குகள் வேட்டையாடப்பட்டுள்ளது.

அ.தி.மு.க., மாநில வர்த்தக அணி அமைப்பாளரும், கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுனில் மற்றும் சிபி ஆகியோரின் அண்ணனான சஜீவனுக்கு சொந்தமான குடியிருப்பில் துப்பாக்கி பதுக்கி வைத்துள்ளதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வனத்துறையினர் அ.தி.மு.க., வர்த்தக அணி அமைப்பாளர் சஜீவனின் குடியிருப்பு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டு வாசலில் புதைத்து வைக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றை வனத்துறையினர் கண்டுபிடித்தனர். மேலும் சஜீவன் தங்கும் அறையில் மேலும் ஒரு துப்பாக்கியும், 11 தோட்டாக்கள், கத்திகள், ரத்தக்கரை படிந்த கோடாரி, டார்ச் லைட்டுகள் மற்றும் காற்று சுழல் துப்பாக்கி ஒன்றும் வனத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து எஸ்டேட் மேலாளரிடம் விசாரணை நடத்தியதில் சஜீவன், அவரது நண்பர் சுப்பையா மற்றும் நண்பர்கள் துப்பாக்கியுடன் எஸ்டேட்டுக்கு வந்து வேட்டையாடுவது வழக்கம் என வாக்குமூலம் அளித்ததனர். அதனடிப்படையில் வனத்துறையினர் குற்றச் செயலில் ஈடுபட்ட பைசல், சாபு ஜேக்கோப், பரமன், ஸ்ரீகுமார், சுபைர் ,அ.தி.மு.க., மாநில வர்த்தக அணி அமைப்பாளர் சஜீவன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதை அறிந்த அ.தி.மு.க., மாநில வர்த்தக அணி அமைப்பாளருமான சஜீவன் உட்பட மூன்று பேர் தலைமறைவு ஆகிய நிலையில் பைசல், சாகுஜேக்கப், பரமன் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். முக்கிய குற்றவாளியாக செயல்பட்ட அ.தி.மு.க., வர்த்தக அணி அமைப்பாளர் சஜீவன் உட்பட மேலும் இருவரை வனத்துறையினர் தனிக்குழு அமைத்து தேடி வருகின்றனர். சஜீவன் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., தேர்தல் பொறுப்பாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News