காட்டுஎடையாரில் 9 மாத கர்ப்பிணி சிறுமி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்தனர். ரிஷிவந்தியம் அடுத்த காட்டுஎடையாரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ஜெயபிரகாஷ், 24; கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளி. இவர், 16 வயது சிறுமியை காதலித்து கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி திருமணம் செய்து கொண்டார். சிறுமி தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் சிறுமி நேற்று முன்தினம் வீட்டில் தனியாக துாக்கு போட்டு இறந்தார். தகவலறிந்த ரிஷிவந்தியம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, விசாரணை நடத்தினர். மேலும், சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கி தற்கொலைக்கு துாண்டியதாக ஜெயபிரகாஷ் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிந்தனர். ஆர்.டி.ஓ., விசாரணையும் நடக்கிறது.