சட்டவிரோதமாக பார் நடத்தியவர் கைது

கைது

Update: 2024-08-03 00:46 GMT
கள்ளக்குறிச்சியில் மது அருந்துவதற்கென தனி அறை அமைத்து ஏற்பாடு செய்த கடை உரிமையாளரை போலீசார் கைது செய்து, கடைக்கு 'சீல்' வைத்தனர். கள்ளக்குறிச்சி, கச்சிராயபாளையம் சாலையில் உள்ள ஒரு கடையில் சிலர் மது அருந்துவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ராபின்சன், சப் இன்ஸ்பெக்டர் கவுதமன் மற்றும் போலீசார் நேற்று மதியம் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அங்கு, டாஸ்மாக் கடைக்கு அருகே திண்பண்டங்கள் விற்பனை செய்யும் கடைக்குள், மது அருந்துவதற்கென தனி அறை அமைக்கப்பட்டு அங்கு சிலர் மது அருந்தியதும் தெரிந்தது. இதையடுத்து, கடை உரிமையாளர் ஷாகுல் ஹமீது,60; என்பவரை கைது செய்தனர். அங்கிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். தகவலறிந்த கோட்ட கலால் அலுவலர் சிவசங்கரன், வருவாய் ஆய்வாளர் குப்புசாமி, வி.ஏ.ஓ., தெய்வீகன் ஆகியோர் மது அருந்து அனுமதித்த கடைக்கு 'சீல்' வைத்தனர். தொடர்ந்து, டாஸ்மாக் கடை விற்பனையாளரிடம் மொத்தமாக மதுபாட்டில் விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தினர். மேலும், டாஸ்மாக் கடையை ஒட்டியவாறு உள்ள கடைகளுக்கு சென்று, மது அருந்த அனுமதிக்க கூடாது, மீறினால் கடைக்கு 'சீல்' வைக்கப்படும் என எச்சரித்தனர்.

Similar News