சாலை பராமரிப்பில் அதிகாரிகள் அலட்சியம்

முதல்வர் வந்ததால் பாதி துாரம் 'பேட்ச் ஒர்க்' : சாலை பராமரிப்பில் அதிகாரிகள் அலட்சியம்

Update: 2024-08-21 05:24 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் - ஸ்ரீபெரும்புதுார் சாலை 25 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலையை, திருக்கச்சூர், ஆப்பூர், தெள்ளிமேடு உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தினமும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வர பயன்படுத்தி வருகின்றனர். மேலும், ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் சிப்காட் பகுதியில் உள்ள நுாற்றுக்கணக்கான தொழிற்சாலைகளுக்கு செல்லும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள், தினமும் சென்று வருகின்றன. இந்த சாலை, சிங்கபெருமாள் கோவில் - வடக்குப்பட்டு கூட்டு சாலை வரை, 10 கி.மீ., துாரம் செங்கல்பட்டு மாவட்டத்திலும், மீதம் உள்ள 15 கி.மீ., காஞ்சிபுரம் மாவட்ட எல்லையிலும் உள்ளது. இந்த சாலையை, மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பராமரித்து வருகின்றனர். இந்த சாலையில், 100க்கும் மேற்பட்ட இடங்களில் பள்ளம் ஏற்பட்டு, குண்டும் குழியுமாக உள்ளது. சர்வீஸ் சாலையில், சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து, வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இந்நிலையில், கடந்த 17ம் தேதி, தமிழக முதல்வர் காஞ்சிபுரம் மாவட்டம், வல்லம் பகுதியில் சிப்காட் தொழிலாளர்களுக்கு குடியிருப்புகளை திறந்து வைக்க, இந்த சாலையில் வந்தார். இதற்காக, ஸ்ரீபெரும்புதுார் - வல்லம் வரை, 9 கி.மீ., தொலைவுக்கு சாலையில் இருந்த பள்ளங்களை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தார் ஊற்றி சரி செய்தனர். மீதம் உள்ள பகுதிகளில் பள்ளங்கள் சரி செய்யாததால், வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

Similar News