குரங்குகள் புகுந்து அட்டகாசம் செய்வதால் அச்சத்தில் மக்கள்

சிங்கம்புணரியில் நகர் மற்றும் கிராம பகுதிகளுக்குள் ஏராளமான குரங்குகள் புகுந்து அட்டகாசம் செய்வதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Update: 2024-08-26 11:22 GMT
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் நகர் மற்றும் கிராம பகுதிகளுக்குள் ஏராளமான குரங்குகள் புகுந்து அட்டகாசம் செய்வதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இப்பேரூராட்சியில் சுந்தர நகர், தெற்கு தெரு, கொருங்காகோட்டை விலக்கு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான குரங்குகள் திரிகின்றன. முட்டாக்கட்டி, ஒடுவன்பட்டி உள்ளிட்ட கிராமங்களிலும் குரங்குகள் வயல், தோப்புகளில் திரிகின்றன. வெளியூரில் பிடிபட்ட குரங்குகளை பிடித்தவர்கள் இப்பகுதியில் கொண்டு வந்து விட்டுச் சென்றதால் அவை பெருகிவிட்டன.இவற்றைப் பிடித்து மலையில் விட பொதுமக்கள் வலியுறுத்தி வரும் நிலையில் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. குரங்குகளை பிடிப்பதற்கு கூடுதல் தொகை செலவாகும். அதற்கான நிதி ஒதுக்கீடு குறைவாகவே உள்ளது. இதனால் குரங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் உள்ளது. தெருக்களில் நுழையும் குரங்குகள் சிறுவர்களை விரட்டி கடிக்க முயல்வதும் அவற்றை நாய்கள் விரட்டுவதும் தொடர்கிறது. அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பாக நகர் மற்றும் கிராம பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து பிரான்மலை, அழகர்கோவில் மலைப்பகுதியில் விட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Similar News