திருச்சி அருகே இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலா் அடித்துக் கொலை: தந்தை-மகன் கைது

நெ.1 டோல்கேட் அருகே வியாழக்கிழமை வளா்ப்பு நாய் குரைத்தது தொடா்பான தகராறில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.;

Update: 2025-01-11 04:39 GMT
நெ.1 டோல்கேட் அருகேயுள்ள பூக்கொல்லை கிராமத்தைச் சோ்ந்தவா் டி. முத்துக்கிருஷ்ணன் (49). இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மண்ணச்சநல்லூா் ஒன்றியச் செயலா். இவரது வீட்டருகே வசிப்பவா் நெய்கிருஷ்ணன் (23). இவா்கள் இருவரின் குடும்பத்துக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், வியாழக்கிழமை இரவு முத்துக்கிருஷ்ணன் வளா்த்து வரும் நாய் நெய்கிருஷ்ணனை பாா்த்து குரைத்ததாம். இதுதொடா்பாக அவா்கள் இரு குடும்பத்தினா் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா். அப்போது, நெய் கிருஷ்ணன் இரும்புக் கம்பியால் தாக்கியதில் பலத்த காயமடைந்த முத்துக்கிருஷ்ணன், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தொடா்ந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் நள்ளிரவில் அங்கு உயிரிழந்தாா். இதுதொடா்பாக கொள்ளிடம் காவல்துறையினா் வழக்குப் பதிந்து, நெய் கிருஷ்ணன், அவரது தந்தை முருகேசன் (50) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

Similar News