சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு
சாலை விதிகளைப் பின்பற்றி தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கிப் பாராட்டினர்.;
பெரம்பலூர் மாவட்டம் போக்குவரத்துக் காவல்துறையினர் சார்பில் நடத்தப்பட்ட சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி - மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா, பங்கேற்பு பெரம்பலூர் மாவட்ட போக்குவரத்துக் காவல்துறையின் சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு ரோவர் ஆர்ச் பகுதியில், விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (21.1.2025) நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆதர்ஷ் பசேரா கலந்துகொண்டு, சாலை விதிகளைப் பின்பற்றி தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கிப் பாராட்டினர். ”விபத்தில்லா தமிழ்நாடு” என்ற இலக்கினை அடையும் பொருட்டு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு, திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. வாகன ஓட்டுநர்கள் தூக்கமின்மை, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுதல் போன்ற காரணங்களால் சாலை விபத்துக்கள் ஏற்பட்டு, உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. தமிழக அரசு இதுபோன்ற விபத்துகள் நிகழாமல் தடுக்க பல்வேறு சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக பெரும்பாலான விபத்துகளில் தலைக்கவசம் அணியாமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ள நிலையில், வாகன ஓட்டிகளிடம் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதனடிப்படையில், சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட தேசிய நெடுஞ்சாலை, நகர்ப்புற போக்குவரத்து காவல்துறை சார்பில் இன்று நடத்தப்பட்ட சாலை போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில், தலைக்கவசம் அணியாமல் வந்த வாகனம் ஓட்டிகளுக்கு, சாலை விதிகளை விளக்கி தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி அவர்களுக்கு இலவசமாக தலைக்கவசங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களும் வழங்கினர். இனிவரும் காலங்களில் மீண்டும் இதுபோன்று தலைக்கவசம் அணியாமல் வாகனங்களை ஓட்டிச் சென்றால் போக்குவரத்து விதியின்படி அபராதம் விதிக்கப்படும் என இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர், அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆகியோர் அறிவுறுத்தினார். மேலும், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு தகவல்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் வாகன ஓட்டிகளுக்கு வழங்கினர். இந்நிகழ்வில் மாவட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் ஆ.ஆரோக்கியராஜ், வட்டாட்சியர் சரவணன், தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் கிள்ளிவளவன், நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் மகேஷ், உதவி போக்குவரத்துத்துறை ஆய்வாளர்கள், காவல் துறையினர்கள் மற்றும் பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.