விழுப்புரம் - நாகை நான்கு வழிசாலை பணி முழுவதும் முடிக்காமல் கட்டணம் வசூலிக்க ஏற்பாடு
நான்கு வழிசாலை பணி முழுவதும் முடிக்காமல் கட்டணம் வசூலிக்க ஏற்பாடு;
விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே 179.5 கி.மீ., துாரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்க மத்திய அரசு 6,431 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. பணிகளை விரைந்து முடித்திட நான்கு கட்டங்களாக பிரித்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் 'நகாய்' ஒப்பந்தம் செய்தது.முதல் கட்டமாக விழுப்புரம் - எம்.என்.குப்பம் வரை 2 சிறு பாலங்கள் மற்றும் 14 மேம்பாலங்களுடன் 1400 கோடி ரூபாய் மதிப்பிலும், 2ம் கட்டமாக எம்.என்.குப்பத்தில் இருந்து கடலுார் பூண்டியாங்குப்பம் வரை 10 சிறு பாலங்கள் மற்றும் ஆற்றின் குறுக்கே 3 பெரிய பாலங்கள், 18 மேம்பாலங்களுடன் 1600 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளை, திலீப் கன்ஸ்ட்ரக் ஷன் நிறுவனத்தார் ஒப்பந்தம் எடுத்து பணியை செய்து முடித்தனர்.அதில், விழுப்புரம் - எம்.என்.குப்பம் வரை 29 கி.மீ., துாரத்திற்கு பணி முடிந்ததை நகாய் அதிகாரிகள் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கினர். அதனையொட்டி இச்சாலையில் கெங்கராம்பாளையம் அருகே அமைக்கப்பட்டுள்ள டோல்கேட் கடந்த ஜனவரி மாதம் திறக்க திட்டமிட்ட நிலையில், பாலங்களில் ஆங்காங்கே பழுது ஏற்பட்டதால் டோல் கேட் திறப்பதை ஒத்திவைத்தனர்.தற்போது, விழுப்புரம் முதல் எம்.என்.குப்பம் வரை பராமரிப்பு பணி முடிவடைந்ததையொட்டி, வரும் 26 அல்லது 28ம் தேதி, சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக திறக்க திட்டமிட்டுள்ளனர். அன்று முதல், 29 கி மீ., துாரத்திற்கு மட்டும் சுங்க வரி பயணிகளிடம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.டோல்கேட் திறந்து கட்டணம் வசூலிப்பதில் ஆர்வம் காட்டும் நகாய் அதிகாரிகள், மக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்திட பாலங்கள் மற்றும் சாலைகள் சீரமைக்கும் பணியை விரைந்து முடிப்பதில் காட்ட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.