சர்க்கரை கொள்முதல்
பழனி முருகன் கோவிலுக்கு ரூ. 45 லட்சம் மதிப்பிலான நாட்டுச் சர்க்கரை கொள்முதல்;
பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாதங்கள் தயாரிக்க ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருந்து கரும்புச் சர்க்கரை எனப்படும் நாட்டுச் சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.அதன்படி, நேற்று நடைபெற்ற ஏலத்தில் பங்கேற்க சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 2,331 மூட்டைகள் நாட்டுச் சர்க்கரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், 60 கிலோ எடையிலான ஒரு மூட்டை, முதல் தரம், ஒரே விலையாக ரூ. 2,700க்கு விற்பனையானது. இரண்டாம் தரம், குறைந்தபட்ச விலையாக ஒரு மூட்டை ரூ. 2,580க்கும், அதிகபட்சமாக ரூ. 2,640க்கும், சராசரி விலையாக ரூ. 2,600க்கும் விற்பனையானது.இதில், மொத்தம் 1 லட்சத்து 4 ஆயிரத்து 160 கிலோ எடையிலான 1,736 நாட்டுச் சர்க்கரை மூட்டைகள் விற்பனையாகின. இதன் விற்பனை மதிப்பு ரூ. 45 லட்சத்து 32 ஆயிரத்து 380 ஆகும் என விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்