போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு தொடர்பான விழிப்புணர்வு

மாணவ மாணவிகள் தங்கள் கவனத்தை சிதற விடமால் சிறந்த கல்வியாளராக, அறிவியல் அறிஞர்களாக, மாவட்ட ஆட்சியராக, காவல் கண்காணிப்பாளர்களாக, சிறந்த தொழில் முனைவராகவோ உருவாகிடும் வகையில் எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்;

Update: 2025-02-25 14:26 GMT
பெரம்பலூர் மாவட்டம் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் சிறப்பாக செயல்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி போதைப்பொருட்கள் ஒழிப்பு குழுக்களுக்கு (ANTI DRUG CLUB) பரிசுகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் வழங்கினார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மூலம் "போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு" எனும் கருத்தை மையமாகக் கொண்டு, போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள போதைப்பொருட்கள் ஒழிப்பு குழுக்கள் மூலம் நடத்தப்பட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் சிறப்பாக செயல்பட்ட போதைப்பொருட்கள் ஒழிப்பு குழுக்களுக்கு (ANTI DRUG CLUB) பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆதர்ஷ் பசேரா இ.கா.ப., அவர்கள் ஆகியோர் இன்று (25.02.2025) வழங்கினார்கள். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் போதையில்லாத தமிழ்நாடு உருவாகிடும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் போதைப்பொருள் தொடர்பான உறுதிமொழியேற்பு, போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை விளக்கிடும் வகையில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழச்சிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்கள். அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் 151 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 40 கல்லூரிகளில் போதைப் பொருட்கள் ஒழிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டது. அதன் மூலமாக ஓவியம் வரைதல், பேச்சுப்போட்டி, கருத்தரங்கம், பட்டிமன்றம், சைகை விழிப்புணர்வு நாடகங்கள் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு நடத்தப்பட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் சிறப்பாக செயல்பட்ட போதைப்பொருட்கள் ஒழிப்பு கல்லூரி மற்றும் பள்ளி குழுக்களுக்கு முதல் பரிசாக ரு.15,000, இரண்டாம் பரிசாக ரூ.10,000, மூன்றாம் பரிசாக ரூ.5,000 க்கான காசேலைகளையும் பாராட்டுச் சான்றிதழ்களும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான பிரிவுகளுக்கு தனித்தனியே இன்று வழங்கப்படுகின்றது மேலும், போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் நடமாட்டம் குறித்து தங்களுடைய சுய விபரங்களின்றி புகார் செய்வதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசால் DRUG FREE TN மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலியின் சிறப்பு என்னவென்றால் போதைப் பொருட்கள் விற்பனை குறித்த விபரங்களை தெரிவிப்பவரின் தகவல் கோரப்படாது. இந்த செயலி மிகவும் பாதுகாப்பானது. இதனை மாணவர்கள் கண்டிப்பாக தங்களுடைய அலைபேசி மற்றும் பெற்றோர்களின் அலைபேசியில் பதிவிறக்கம் செய்து கொண்டு, போதை பொருட்கள் பயன்பாடு தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். போதைப்பொருட்கள், பான், குட்கா, கஞ்சா, சட்டவிரோத சாராயம் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்வோர் அல்லது பயன்படுத்துவோர் குறித்து உங்களுக்கு தகவல் தெரிந்தால் இந்த மொபைல் செயலியில் அவர்கள் பற்றிய தகவல்களையும், புகைப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தால் அவற்றையும் பதிவேற்றம் செய்தால், உடனடியாக சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் போதைப் பொருட்களின் பயன்பாடு தடுத்து நிறுத்தப்படும். மாணவ மாணவிகள் தங்கள் கவனத்தை சிதற விடமால் சிறந்த கல்வியாளராக, அறிவியல் அறிஞர்களாக, மாவட்ட ஆட்சியராக, காவல் கண்காணிப்பாளர்களாக, சிறந்த தொழில் முனைவராகவோ உருவாகிடும் வகையில் எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். முன்னதாக, போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு தொடர்பாக போதைப்பொருட்கள் ஒழிப்பு குழுக்களால் (ANTI DRUG CLUB) நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குறித்த புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆகியோர் பார்வையிட்டனர். இந்நிகழ்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (மதுவிலக்கு) பாலமுருகன், முதன்மை கல்வி அலுவலர் முருகாம்பாள், கலால் உதவி ஆணையர்(பொறுப்பு) சிவா, வேப்பந்தட்டை அரசு கலைக்கல்லூரி முதல்வர் சேகர் மற்றும் பல்வேறு அரசு அலுவலர்கள், போதை எதிர்ப்பு மன்றங்கள் கலந்து கொண்டனர்.

Similar News