தீ விபத்தில் லாரி முழுவதும் எரிந்து சேதம்
மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு லாரி முழுவதும் சேதம் அடைந்தது;
பள்ளிபாளையம் ஒன்றியம் படைவீடு சாமுண்டூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 53). இவர் தனக்கு சொந்தமான லாரியில் வெப்படை பகுதியில் இயங்கி வரும் தனியார் நூற்பாலையில் இருந்து பஞ்சு மூட்டைகள் ஏற்றிக்கொண்டு பாதரை அருகே உள்ள குடோனுக்கு கொண்டு செல்வதற்காக சனிக்கிழமை அன்று வந்து கொண்டிருந்தார். லாரி பாதரை எனும் இடத்திற்கு அருகே வந்தது.அப்போது லாரியில் ஏற்றப்பட்டு இருந்த பஞ்சு மூட்டைகள் ரோட்டின் குறுக்கே சென்ற மின்கம்பியில் உரசியது. இதனால் பஞ்சு மூட்டை தீப்பற்றி எரிந்தது. ஆனால் தீப்பற்றியது தெரியாமல் செல்வராஜ் லாரியை ஓட்டிக்கொண்டு இருந்தார். இந்தநிலையில் பின்னால் வந்த வாகன ஓட்டிகள் லாரியில் தீப்பிடித்து எரிகிறது என்று சொன்னதும் பதறிப்போய் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தின் அருகே லாரியை அவர் நிறுத்தினார். அதற்குள் லாரி முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது. உடனே அவர் கீழே குதித்து உயிர் தப்பினார். இதுகுறித்து உடனே வெப்படை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சுமார் 3- மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் பஞ்சு மூட்டையுடன் லாரி முழுவதும் எரிந்து நாசமானது. அது 10 லட்சம் ரூபாய் மதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து வெப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.