
கள்ளக்குறிச்சி, அகரத்தான் கொள்ளை தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் மனைவி ஜோதி,48; கடந்த, 6ம் தேதி மாலை 6:30 மணியளவில், சேலம் செல்ல ஏமப்பேர் பஸ்நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது சாலையோர புளியமரத்தின் கிளை முறிந்து அவர் மீது விழுந்தது. இதில் ஜோதியின் தலை, கழுத்து, தண்டுவடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது. அவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, கோயம்புத்துார் தனியார் மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.