பங்குனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு
அஷ்ட பைரவருக்கு மகா அபிஷேகம் - தீபாராதனை;
நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த திருவாய்மூரில், சப்த விடங்க ஸ்தலங்களில் ஒன்றாகவும், அஷ்ட பைரவர் சன்னதியாக விளங்கும் ஶ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.இக்கோயிலில், காசிக்கு அடுத்தபடியாக சத்ரு சம்ஹார பைரவர், அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், கபால பைரவர், உன்மத்த பைரவர், பீஷண பைரவர் ஆகிய 8 பைரவர்கள் ஒரே சன்னதியில் அருள்பாலித்து வருகின்றனர். இங்கு பங்குனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, மஹா யாகம் சிவாச்சாரியார் பிச்சைமணி தலைமையில் நடைபெற்றது. மஹா பூர்ணாஹூதியை தொடர்ந்து, கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர், புனித நீர் கொண்டு வரப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, பைரவருக்கு திரவிய பொடி, மஞ்சள் பொடி, பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம், குங்குமம் உட்பட பல்வேறு திரவியங்கள் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், பைரவருக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில், நாகை மட்டுமின்றி திருவாரூர், மயிலாடுதுறை ,காரைக்கால் உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.