வனத்துறை எச்சரிக்கை

பண்ணாரி கோவில் அருகே யானை, சிறுத்தை நடமாட்டத்தால் வாகன ஓட்டிகள் அச்சம் வனத்துறையினர் எச்சரிக்கை;

Update: 2025-03-25 03:18 GMT
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை, கரடி, மான் உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. சமீப காலமாக உணவு தண்ணீரை தேடி அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் சத்தி - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உலா வருவது தொடர்கதை ஆகி வருகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பண்ணாரி அம்மன் கோவில் அருகே உள்ள தேசிய நெடுச்சாலையில் ஒற்றை யானை ஒன்று வனப்பகுதியை விட்டு வெளியேறி நீண்ட நேரமாக சாலையின் குறுக்கே அங்குமாக சென்று கொண்டிருந்தது. யானை நடமாட்டத்தை கண்ட வாகன ஓட்டுகள் தங்களது வாகனங்களை நீண்ட தொலைவிலேயே நிறுத்திவிட்டனர். சிறிது நேரம் சாலையில் உலா வந்த ஒற்றை யானை பின்னர் மீண்டும் வனப் பகுதிக்குள் சென்றது. அதன் பிறகே வாகன ஓட்டிகள் அங்கிருந்து கிளம்பி சென்றனர். இதைப்போல் பண்ணாரி அம்மன் கோவில் அருகே உள்ள வனப்பகுதியில் உள்ள சாலையோரம் சிறுத்தை ஒன்று படுத்து இருந்தது. அப்போது அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி சிறுத்தையை தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். சிறிது நேரத்தில் சிறுத்தை எழுந்து வனப்பகுதிக்குள் சென்று விட்டது. பண்ணாரி அம்மன் கோவில் அருகே வனப்பகுதி அருகே உள்ள சாலையில் யானை சிறுத்தை நடமாட்டத்தால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வனவிலங்குகள் தண்ணீர் தேடி இடம்பெறுவது அதிகரித்துள்ளது. இதனை அடுத்து வனத்துறையினர் சார்பில் வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் மணி தொடங்கி நடந்து வருகிறது. எனவே வாகன போட்டிகள் வனப்பகுதி வழியாக செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் எக்காரணம் கொண்டும் தங்களது வாகனங்களை வனப்பகுதியில் நிறுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News