வாலிபர் சாவில் சந்தேகம் பொதுமக்கள் முற்றுகை

முற்றுகை;

Update: 2025-04-04 03:32 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம், பழைய சிறுவங்கூரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் பர்கத்குமார், 23; கரும்பு வெட்டும் தொழிலாளி. இவருக்கும், அணைக்கரைகோட்டாலத்தை சேர்ந்த நேரு மகள் பேபிக்கும், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கடந்த சில தினங்களுக்கு முன், பர்கத்குமார் கரும்பு வெட்ட ராசிபுரம் சென்றார். அங்கு அவருக்கும், பேபியின் அண்ணன் அஜித்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின், கடந்த 1ம் தேதி பழைய சிறுவங்கூர் வந்த பர்கத்குமார், நேற்று முன்தினம் காலை 6:00 மணியளவில் அணைக்கரைகோட்டாலம் அய்யனார் கோவில் அருகே உள்ள மரத்தில் துாக்கில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கள்ளக்குறிச்சி போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்நிலையில், பர்கத்குமார் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை பாலகிருஷ்ணன் கள்ளக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். மேலும், வாலிபரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நேற்று பகல் 12:00 மணியளவில் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். டி.எஸ்.பி., தேவராஜ் பேச்சு வார்த்தை நடத்தினார். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் கூறியதை தொடர்ந்து, 12:45 மணியளவில் கலைந்து சென்றனர்.

Similar News