சேலம் போடிநாயக்கன்பட்டி ஏரியில் மூழ்கி சிறுவன் பலி

தேர்வு முடிந்து நண்பர்களுடன் குளிக்க சென்ற போது நேர்ந்த சோகம்;

Update: 2025-04-08 13:51 GMT
சேலம் சூரமங்கலம் அருகே போடிநாயக்கன்பட்டி ஏரியில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் வெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மகன் மனோஜ் (12), சுப்பிரமணிய நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியல் 7 ஆம் வகுப்பு படித்து வந்தான். இன்று மதியம் தேர்வு முடிந்து, தனது நண்பர்களுடன், போடிநாயக்கன்பட்டி ஏரிக்கு குளிக்கச் சென்றுள்ளான். அப்போது, திடீரென தூர்வாரப்படாத பகுதியில் சிறுவன் சிக்கியதாக கூறப்படுகிறது. உடனடியாக நண்பர்கள் கூச்சலிட, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிறுவனை காப்பாற்ற முயன்றனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கும் தகவல் தெரிவித்தனர். குறுகலான பாதையில் ஆம்புலன்ஸ் நுழையாததால், சூரமங்கலம் உழவர் சந்தை வரை சிறுவனை இருசக்கர வாகனத்தில் அப்பகுதி இளைஞர்கள் அழைத்து வந்தனர். எனினும், வழியிலேயே சிறுவனின் உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த சூரமங்கலம் போலீஸார், சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சூரமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News