தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை பார்வையிட ஒரு வாரம் நுழைவுக் கட்டணம் இல்லை
வரலாற்று புராதான சின்னமான தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில் உலக மரபு தின விழாவை முன்னிட்டு இன்றுமுதல் இம்மாதம் 24-ஆம் தேதி வரை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் இலவசமாக கண்டு ரசிக்க தொல்லியல் துறை அனுமதி;
: கலைக்குழுவினரின் சாமியாட்டத்தை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்:- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையில் அமைந்துள்ள வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை தொல்லியல் துறையின் அகழ்வைப்பகமாவும் உள்ளது. இங்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அகழ்வைப்பகத்தில் உள்ள புராதன வரலாற்று சின்னங்கள் மற்றும் பண்டையகால சுவடுகளை பார்வையிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆண்டுதோறும் உலக மரபு தின விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இன்றுமுதல் இம்மாதம் 24-ஆம் தேதி வரையிலான ஒரு வாரம் உலக மரபு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த 7 நாட்களும் பொதுமக்கள், மாணவர்கள், சுற்றுலா பயணிகள் டேனிஷ் கோட்டை மற்றும் தொல்லியல் அகழ்வைப்பகத்தை கட்டணம் இன்றி இலவசமாக பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர். இதன் மூலம் தொல்லியல், கல்வெட்டியல் குறித்து அறிந்து கொள்வதோடு பாதுகாக்கப்பட்டுவரும் புராதன சின்னங்கள் பண்டைய கால வாழ்க்கை வரலாறு, நாகரிகம் குறித்தும் அனைவரும் அறிந்துகொள்ள பயனுள்ளதாக உள்ளது. உலக மரபு தின விழாவின் முதல் நாளான இன்று தரங்கம்பாடி டேனீஷ் கோட்டை வளாகத்தில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மயிலாடுதுறை கலைத்தாய் கலைக்குழுவினரின் சாமியாட்ட விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.