தஞ்சாவூரில் தங்கும் விடுதியில் ஆறாவது மாடியிலிருந்து திங்கள்கிழமை மாலை இளைஞர் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். தஞ்சாவூர் கீழவாசல் வாடிவாசல் கடைத் தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் மகன் செந்தில்நாதன் (30). இவர் தலைமை அஞ்சலகம் அருகே தோசைக் கடை நடத்தி வந்தார். இவருக்கு மனைவி, 2 வயதில் மகன் உள்ளனர். இந்நிலையில், இவர் தஞ்சாவூர் கீழ்ப்பாலம் அருகேயுள்ள தனியார் தங்கும் விடுதிக்குள் திங்கள்கிழமை மாலை உள்ளே சென்றார். ஆறாவது மாடிக்குச் சென்று அங்கிருந்து கீழே விழுந்த செந்தில்நாதன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இது குறித்து தெற்கு காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.