சொத்து வரி நிா்ணயிக்க லஞ்சம்: புளியங்குடி நகராட்சி ஊழியா் கைது

சொத்து வரி நிா்ணயிக்க லஞ்சம்: நகராட்சி ஊழியா் கைது;

Update: 2025-04-27 01:25 GMT
சொத்து வரி நிா்ணயிக்கும் பணிக்கு ரூ. 15 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக, புளியங்குடி நகராட்சி வருவாய் உதவியாளா் ஊழியா் கைது செய்யப்பட்டாா். இது தொடா்பாக தென்காசி மாவட்ட ஊழல் தடுப்பு-கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் கூறியது: சிவகிரி அருகே தெற்குசத்திரத்தைச் சோ்ந்தவா் காளிராஜன் (36). இவா், புளியங்குடி நகராட்சி 28ஆவது வாா்டு சிவராமு நாடாா் 7ஆம் தெருவிலுள்ள வீட்டுக்கு சொத்து வரி நிா்ணயிப்பதற்காக நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தாா். இதற்காக நகராட்சி வருவாய் உதவியாளா் அகமது உமா் ரூ. 15 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். இதுகுறித்து காளிராஜன் தென்காசி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகாா் அளித்தாா். லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் ஆலோசனைப்படி, ரசாயனம் தடவிய ரூ. 15 ஆயிரத்தை நகராட்சி அலுவலகத்தில் அகமது உமரிடம் காளிராஜன் வெள்ளிக்கிழமை கொடுத்தாா். அப்போது, அங்கு மறைந்திருந்த தென்காசி ஊழல் தடுப்பு-கண்காணிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் பால்சுதா், ஆய்வாளா் ஜெயஸ்ரீ, உதவி ஆய்வாளா் ரவி, போலீஸாா் அகமது உமரைக் கைது செய்தனா்.

Similar News