மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு குறித்துஅலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு குறித்து மாவட்ட அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.;
அரியலூர்,மே 20- அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமை வகித்து பேசுகையில், நடப்பு ஆண்டிற்கான முதல் நிலை மீட்பாளர்கள், என்.சி.சி, என்.எஸ்.எஸ், என்.ஓய்.கே, சாரணர்,ஊர்க்காவல் படையினர் போன்ற தன்னார்வலர்களின் விவரங்களை புதுப்பித்திட வேண்டும். மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் உள்ள தகவல் தொடர்பு உபகரணங்களான தொலைபேசி, செயற்கைக்கோள் தொலைபேசி, ஏர்கு கருவிகள் ஆகியவை மின்கல சேமிப்பு வசதியுடன் சரியாக வேலை செய்வதை உறுதி செய்திட வேண்டும். நிவாரண முகாம்களில் மின்வசதி, உணவு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்திட வேண்டும். மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையினை முன்னிட்டு மழைநீர் வடிகால்கள் தூர்வாருதல், பலவீனமான மரங்கள், மரக்களைகள் அகற்றுதல், பாலங்கள் மற்றும் மதகுகளுக்கு அடியில் உள்ள அடைப்புகளை அகற்றுதல், பழைய மற்றும் பாழடைந்த கட்டிடங்களை அடையாளம் கண்டு பயன்படுத்துவதை தடை செய்தல், பலவீனமான மின்கம்பங்கள், மின்கம்பிகள் ஆகியவற்றை கண்டறிந்து அவைகளை மாற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்திடல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை அந்தந்த துறை சார்ந்த அலுவலர்கள் செய்திட வேண்டும். மேலும், மீட்பு உபகரணங்களை திட்டமிட்டு முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்படும் பதற்றமான பகுதிகளை கண்காணித்திடவேண்டும். உணவுப் பொருள்கள் இப்பருவமழை காலங்களில் 2 மாதங்கள் இருப்பு வைத்திருக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், பொதுமக்கள் பேரிடர் காலத்தில் கட்டணமில்லா தொலைபேசி எண்.1077 மற்றும் 04329 228709 என்ற தொலைபேசி எண்ணுக்கு ம், கட்ச்செவி 9384056231 என்ற எண்ணுக்கும் பாதிப்புகள் குறித்து தகவல் அளிக்கலாம் என்றார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்செல்வன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.ரா.சிவராமன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் ரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) பரிமளம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். :