கோவை: ஹைட்ரோதெரபி பலனளிக்கவில்லை - வனத்துறை தகவல் !
பெண் யானைக்கு ஹைட்ரோதெரபி சிகிச்சை கொடுத்தும் பலன் கொடுக்கவில்லை என வனத்துறை அறிக்கை.;
மருதமலை அடிவாரத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த ஒரு பெண் யானை, வனத்துறையினர் அளித்த தீவிர சிகிச்சைகள் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த யானைக்கு ஹைட்ரோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனில்லை. கடந்த மே 17 அன்று, பாரதியார் பல்கலைக்கழகம் அருகே தனது குட்டியுடன் நீண்ட நேரம் அசையாமல் நின்ற தாய் யானை, திடீரென மயங்கி விழுந்தது. வனத்துறையினர் குட்டி யானையை கும்கி யானை ஒரியன் உதவியுடன் வனப்பகுதிக்குள் விரட்டிவிட்டு, தாய் யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். நான்கு நாட்களாக கிரேன் உதவியுடன் யானையை நிறுத்தி, நரம்பு வழி மற்றும் ஊசி மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. பசுந்தீவனம், பழங்கள், களி, தண்ணீர் என உணவும் வழங்கப்பட்டது. தொண்டை மற்றும் வாய்ப்பகுதியில் தொற்று காரணமாக புண் ஏற்பட்டிருந்ததால் உணவு உட்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. சுமார் 100 பாட்டில் குளுக்கோஸ் மற்றும் 80 லிட்டர் தண்ணீர் ஜீரணமாவதற்காக செலுத்தப்பட்டது. நேற்று செயற்கை தண்ணீர் தொட்டி அமைத்து, ஹைட்ரோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. தசைகள் இறுக்கம் நீங்கி, ரத்த ஓட்டம் சீராகி புத்துணர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில மணி நேரங்களிலேயே யானை உயிரிழந்தது. யானைக்கு கல்லீரல் பாதிப்பு இருந்ததாகவும், அதன் சாணத்தில் அதிகளவில் பிளாஸ்டிக்கள் இருந்ததாகவும் வன கால்நடை மருத்துவர் சுகுமார் தெரிவித்துள்ளார்.