பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக்கூறப்படும் திருவட்டார் தளியல் தெரு ஸ்ரீ ஜடாதீஷ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 5.ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று 12 ஜோதிர்லிங்க புனித தலங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர் தனித்தனி கலசங்களில் நிறைத்து பூஜையில் வைக்கப்பட்டது. இன்று காலை கணபதி ஹோமத்தைத்தொடர்ந்து மூலவருக்கு பிரம்ம கலசத்தால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் கைலாய வாத்தியம் முழங்க, முத்துக்குடை சூழ, பஞ்சாரி மேளம் ஒலிக்க 12 ஜோதிர்லிங்க கலசங்கள் எழுந்தருளி கோவிலை வலம் வந்தது. அதனைத்தொடர்ந்து அர்ச்சகர்கள் கும்ப கலசத்துடன் கோபுர உச்சிப்பகுதிக்கு சென்றனர். 12 ஜோதிர் லிங்க புனித நீரும் தனித்தனியாக கும்ப கலசத்தின் மீது ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கும்பத்திற்கு வஸ்திரம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. கணபதி சன்னதியில் கும்பாபிஷேகம் தனியாக நடந்தது. தொடர்ந்து சமய வகுப்பு மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.