கோவை: உயர் ரக போதைப் பொருள் கடத்திய வாலிபர் கைது!
கோவை ரத்தினபுரி பகுதியில் காவல்துறையினர் சோதனையில் உயர் ரக போதை பொருள் கடத்திய வாலிபரை கைது செய்தனர்.;
கோவை ரத்தினபுரியில் மேம்பாலத்துக்குக் கீழ் சந்தேகத்துக்கிடமாக இருந்த வாலிபர் ஒருவரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர் சோதனையில் நேற்று பிடித்தனர். கைது செய்யப்பட்டவர் கோவை மணியகாரம்பாளையத்தைச் சேர்ந்த கோகுல் என்பதும், இவர் பண்ருட்டி ஆனைகட்டியில் இருந்து உயர் ரக போதைப் பொருள்கள் வாங்கி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அவரிடம் இருந்து 27 கிராம் குஷ் கஞ்சா மற்றும் 4 கிராம் மெத்தபெட்டமைன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.1.5 லட்சம் என மதிப்பிடப்படுகிறது. கோகுல் மீது ஏற்கனவே இரு வழக்குகள் உள்ளதாகவும், தொடர்ந்து ஆனைகட்டியில் யார் இந்த போதைப் பொருட்களை வழங்குகின்றனர் என்பதைப் பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.