தஞ்சாவூர் அருகே 16 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்த ஜேசிபி ஆபரேட்டரை காவல்துறையினர் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம், அரியாணிப்பட்டி பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் விக்னேஷ் (19). ஜேசிபி ஆபரேட்டர். இவர் பணி காரணமாக, தஞ்சாவூர் அருகே ஒரு கிராமப்பகுதிக்கு வந்த போது அந்த பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி விக்னேஷ் நெருங்கிப் பழகியுள்ளார். இந்நிலையில் கடந்த 17 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் மனஉளைச்சலுக்கு உள்ளான அந்த சிறுமி தனக்கு நடந்தது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். அந்த சிறுமியின் பெற்றோர் தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் செய்தனர். இதன்பேரில், காவல்துறையினர் விக்னேஷைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் விக்னேஷ் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது உண்மை என்று தெரிய வந்தது. இதையடுத்து தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விக்னேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.