வீடு புகுந்து தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு

கிரைம்;

Update: 2025-06-22 03:53 GMT
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே வீடு புகுந்து தந்தை மற்றும் மகனை வெட்டிய இரண்டு நபா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பாபநாசம் அருகே அய்யம்பேட்டை காவல் சரகம், தொட்டி மாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அன்பழகன் இவரது மகன் ஆனந்த் (29). கூலி தொழிலாளி. திருச்சோற்றுத்துறை, சாலை தெருவைச் சோ்ந்தவா் முத்தையன் மகன் வினோத் குமாா் (38). கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆனந்துக்கும் வினோத் குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அவா்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந் நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை ஆனந்த் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது அங்கு சென்ற வினோத் குமாரும் அவருடைய உறவினா் மாத்தூா் சிவன் கோயில் தெருவைச் சோ்ந்த மணிகண்டன் என்பவரும் ஆனந்தை அரிவாளால் வெட்டினா். இதை தடுக்க வந்த ஆனந்தின் தந்தை அன்பழகனுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த அய்யம்பேட்டை காவல் ஆய்வாளா் சாந்தி மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று காயம் அடைந்தவா்களை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.புகாரின் பேரில் வினோத்குமாா், மணிகண்டன் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

Similar News