காவல் நிலையம் முன்பு திடீர் சாலை மறியல்
வத்தலக்குண்டு அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் வத்தலக்குண்டு காவல் நிலையம் முன்பு திடீர் சாலை மறியல் போராட்டம்;
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே கோம்பைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜாங்கம் (36) கண்ணாபட்டி கிராமத்தில் செயல்படும் ஒரு தனியார் தார் கலவை தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று ராஜாங்கம் பணியில் இருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ராஜாங்கம் உடலை கைப்பற்றிய விருவீடு போலீசார் உடற்கூராய்வுக்கு வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தனியார் தார் கலவை தொழிற்சாலையில் நிர்வாகத்தின் அஜாக்கிரதை காரணமாக ராஜாங்கம் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகவும் உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ராஜாங்கத்தின் உறவினர்கள் ராஜாங்கத்தின் உடலை வாங்க மறுத்து வத்தலக்குண்டு காவல் நிலையம் முன்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வத்தலகுண்டு பெரியகுளம் சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர் இதனால் வத்தலக்குண்டில் பரபரப்பு நிலவியது.