பனிமய மாதா பேராலயத்தில் திவ்ய நற்கருணை பவனி!
தூத்துக்குடியில் தூய பனிமய மாதா பேராலயத்தின் 443வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு திவ்ய நற்கருணை பவனி நடைபெற்றது.;
தூத்துக்குடியில் தூய பனிமய மாதா பேராலயத்தின் 443வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு திவ்ய நற்கருணை பவனி நடைபெற்றது. தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற பனிமயமாதா ஆலயத்தில் ஆண்டுதோறும் ஜூலை மாதம் 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி 11 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா கடந்த 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் செபமாலை, மறையுரை, அருளிக்க ஆசீர், நற்கருணை ஆசீர் நடந்து வருகிறது. இந்த நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான புதுநன்மை விழா இன்று ஆக.3-ஆம் தேதி காலை நடந்தது. மாலையில் திவ்ய நற்கருணை பவனி இன்று நடைபெற்றது. ஆலய வளாகத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் திவ்ய நற்கருணை பேழையை மறைமாவட்ட ஆயர் கைகளில் ஏந்தி நகர் முழுவதும் பவனியாக கொண்டு வரப்பட்டு தூய பனிமய மாதா ஆலயம் முன்பாக அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டு அருள் ஆசி உரை வழங்கப்பட்டது. இந்த நற்கருணை விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.