உத்திரமேரூரில் பேருந்தை நேரத்திற்கு இயக்கப்படாததை கண்டித்து மறியல்
உத்திரமேரூர் போக்குவரத்து கழக நிர்வாகத்தினர், சாலை மறியலில் ஈடுபட்ட பயணியரிடம் பேச்சு நடத்தினர். அதை தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்;
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் இருந்து, தாம்பரத்திற்கு தடம் எண்504 என்ற பேருந்து தினமும் காலை 6:30 மணிக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நெல்வாய் கூட்டுச்சாலை, புக்கத்துறை, செங்கல்பட்டு வழியாக தாம்பரத்திற்கு இயக்கப்படுகிறது. இந்நிலையில், வழக்கம்போல, இப்பேருந்து உத்திரமேரூர் பேருந்து நிலையத்திற்கு நேற்று காலை 6:30 மணிக்கு வந்தது. ஆனால், உடனே பேருந்தை தாம்பரத்திற்கு இயக்காமல் பேருந்து நிலையத்திலே காலை 7:00 மணி வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால், வழக்கமாக இப்பேருந்துக்காக காத்திருந்த பயணியர், ஏன் பேருந்தை குறித்த நேரத்திற்கு இயக்கவில்லை என்று கேட்டுள்ளனர். அதற்கு, போக்குவரத்து கழக நிர்வாகம் சார்பில், 7:00 மணிக்குதான் பேருந்து இயக்கப்படும் என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனால், ஆவேசமடைந்த பயணியர் போக்குவரத்து கழக நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பேருந்து நிலையம் முன் உள்ள புக்கத்துறை சாலையில், மறியலில் செய்தனர். இதையடுத்து, உத்திரமேரூர் போக்குவரத்து கழக நிர்வாகத்தினர், சாலை மறியலில் ஈடுபட்ட பயணியரிடம் பேச்சு நடத்தினர். அதை தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.