தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக மாற்றிவிட்டது பாஜக - முதல்வர் ஸ்டாலின் சாடல்

தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக பாஜக மாற்றிவிட்டது என்று சாடியுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். மேலும், வாக்குத் திருட்டுக்கு எதிராக ராகுல் காந்தி முன்னெடுக்கும் போராட்டுத்துக்கு திமுக தோளோடு தோள் கொடுக்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.;

Update: 2025-08-11 15:09 GMT
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பதிவில், “தேர்தல் ஆணையத்தை பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் தில்லுமுல்லுகளுக்கான அமைப்பாக மாற்றிவிட்டது. பெங்களூரின் மகாதேவபுரா தொகுதியில் நடைபெற்றது ஏதோ நிர்வாகக் குளறுபடி அல்ல, மக்கள் அளித்த தீர்ப்பைத் திருடுவதற்கான திட்டமிட்ட சதி. எனது சகோதரரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி முன்வைத்துள்ள வாக்குத் திருட்டு ஆதாரங்கள் எந்த அளவுக்கு இந்த முறைகேடு நிகழ்த்தப்பட்டுள்ளது என்பதை அம்பலப்படுத்தியுள்ளது. இன்று, ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கிப் பேரணியாகச் செல்லவுள்ள நிலையில், பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்துகிறோம். கணினியால் படித்தறியக் கூடிய வடிவத்தில் அனைத்து மாநிலங்களின் வாக்காளர் பட்டியல் கோப்பும் உடனடியாக அளிக்கப்பட வேண்டும்; அரசியல் நோக்கத்தோடு வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்குவது நிறுத்தப்பட வேண்டும்; மற்றும்,நமது மக்களாட்சியை அழிக்கும் செயலான இந்த வாக்குத் திருட்டு முறைகேடு குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்தப் போராட்டத்தில் திமுக உறுதியாக உடன் நிற்கிறது. இந்திய மக்களாட்சியைப் பட்டப்பகலில் பாஜக. திருடிச் செல்வதைப் பார்த்துக்கொண்டு நாங்கள் அமைதியாக இருக்கமாட்டோம் என்று பதிவிட்டுள்ளார்.

Similar News