சாலையோரம் பிளாஸ்டிக் குப்பை எரிப்பு பால்நல்லுார் மக்கள் அவதி

தொழிற்சாலை பிளாஸ்டிக் கழிவுகளை சாலையோரங்களில் கொட்டி தீயிட்டு எரிக்கும் நபர்களை கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்;

Update: 2025-08-22 11:53 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்குட்பட்ட பால்நல்லுார் ஊராட்சியில், 1,000 க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்கள் வல்லம், வடகால் சிப்காட் சாலை வழியே, ஸ்ரீபெரும்புதுார் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் பிளாஸ்டிக் குப்பைகளை, இரவு நேரங்களில் சிலர் பால்நல்லுார் சாலையோரங்களிலும், குடியிருப்புகள் இல்லாத காலி இடங்களிலும் கொட்டி தீயிட்டு எரிக்கின்றனர். அதிலிருந்து வெளியேறும் புகையால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பகுதி மக்கள், கண் எரிச்சல், சுவாசக்கோளாறு உள்ளிட்ட பிரச்னையால் அவதி அடைகின்றனர். மேலும், பிளாஸ்டிக் குப்பையை எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரிக்கிறது. எனவே, தொழிற்சாலை பிளாஸ்டிக் கழிவுகளை சாலையோரங்களில் கொட்டி தீயிட்டு எரிக்கும் நபர்களை கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Similar News