மணப்பாடு திருச்சிலுவை நாதர் ஆலய மகிமைப் பெருவிழா!
மணப்பாடு திருச்சிலுவை நாதர் ஆலய மகிமைப் பெருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்;
தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடில் உள்ள திருச்சிலுவை நாதர் ஆலயத்தின் 446-ஆவது மகிமைப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.11 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் கொடியேற்றத்தை முன்னிட்டு காலை 5.45 மணிக்கு புனித யாகப்பர் ஆலயத்தில் திருப்பலி, 6.30 மணிக்கு திருச்சிலுவை ஆலயத்தில் திருப்பலி, மெய்யான திருச்சிலுவை ஆசீரைத் தொடர்ந்து கொடிபவனி, அதைத்தொடர்ந்து காலை 8.10 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. இதில், மணப்பாடு, உடன்குடி, திருச்செந்தூர், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். செப். 13 வரை நவ நாள்களில் திருச்சிலுவை ஆலயத்திலும், புனித யாகப்பர் ஆலயத்திலும் பல்வேறு சபையினர், பள்ளிகள், மணப்பாடு மக்கள், திருப்பயணிகள் பங்கேற்கும் திருப்பலி, ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. செப். 13 ஆம் தேதி மாலையில் ஆலயத்தில் மலையாளத்தில் திருப்பலியும், மாலை ஆராதனையும் நடைபெறும். இதில் தமிழகம், கேரளம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து கிறிஸ்தவர்கள் கலந்துகொள்கின்றனர். செப்.14 காலை யாகப்பர் ஆலயத்திலும், திருச்சிலுவை ஆலயத்திலும் திருப்பலி நடைபெறும். அதைத்தொடர்ந்துதிருச்சிலுவை நாதர் ஆலயத்தைச் சுற்றிலும் ஐந்து திருக்காய சபை பவனி, ஆயர் திருப்பலி, மாலையில் நற்கருணை ஆசீர், மெய்யான திருச்சிலுவை முத்தம் செய்தல், கொடியிறக்கம் நடைபெறும். ஏற்பாடுகளை பங்குதந்தையர்கள், பங்கு கமிட்டியினர், ஆலய நிர்வாகக் குழுவினர் செய்துள்ளனர்.