போதைப்பொருள் பரவல், கல்வி குறைபாடு குறித்து சூர்யா விமர்சனம் !
தமிழக அரசை கடுமையாக விமர்சித்த பாஜக இளைஞரணி தலைவர் எஸ். ஜி சூர்யா.;
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி. சூர்யா, தமிழக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் தலைமை ஆசிரியர், பேராசிரியர் பணியிடங்கள் பெருமளவில் காலியாக இருப்பதால் கல்வித் தரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், எட்டாம் வகுப்பு மாணவர்களில் 75 சதவீதம் பேர் இரண்டாம் வகுப்பு பாடத்தைக் கூடப் படிக்க முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். டாஸ்மாக் மற்றும் பத்திரப்பதிவு துறைகளில் வரி முறைகேடுகள் காரணமாக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதை தடுக்க நடவடிக்கை எடுத்தால் ஆண்டுக்கு 50,000 கோடி ரூபாய் வருவாய் அதிகரிக்கலாம் என்றும் தெரிவித்தார். கடந்த நான்கு ஆண்டுகளில் மாநிலத்தில் குற்றங்கள் 75 சதவீதம் அதிகரித்துள்ளதையும், சென்னை பெண்களுக்கு பாதுகாப்பு குறைந்த நகரங்களில் ஒன்றாக தேசிய குற்றப்பதிவு கூறுவதையும் சூர்யா குறிப்பிட்டார். இளைஞர்களை குறிவைத்து போதைப்பொருள் பரவிக் கொண்டிருப்பதாகவும், புகார் அளித்த மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் பல உள்ளன ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார். மேலும், கோவில்களில் அதிகார துஷ்பிரயோகம் நடைபெறுவதாகவும், உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட தணிக்கைப் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை என்றும் சூர்யா குற்றம்சாட்டினார். தமிழகத்தில் மாற்றம் அவசியம் என்பதால் மக்கள் முடிவு எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.